அமுத மழையில் என் கவிதை நனைகிறது
நிலவே கொஞ்சம் குடை பிடி.
சந்தங்கள் பாடிடும் சந்தனக் குயிலென
வந்திறங்கி ஓர் கவிபடி.
இதழில் நெளியும் ஒரு புன்னகை மின்னல்
இதயம் கீறுவதை படம் பிடி
விண்ணில் மீனெல்லாம் அவள் அழகு பாராமல்
நிரந்தரமாய் ஒரு தடைவிதி!
இளைய மேகங்கள் வாழ்வில் கூடுகிற
அதிசயமான நேரமிது
இதயம் நழுவி மறு இதயம் நுழைகிற
புது சுகம் காணும் காலமிது.
வாலிப தேசத்தின் வசந்தக் காற்றிற்கு
பேதங்கள் ஏதும் தடையிலையே!
தடைகளைத் தகர்த்திடும் காதல் ஏன் என்று
வேதங்களிலும் விடை இல்லையே!
ஆகாய வீதியில் அழகு நடைபயிலும்
பொற்சித்திரம், பொற்சித்திரம்.
அவள் கொலுசிலிருந்து தப்பியவைதாம்
நட்சத்திரம் நட்சத்திரம்!
நிலவு விளக்கேற்றி விடியும் முன் அதை
விற்றுத்தரும், விற்றுத்தரும்.
விற்ற ரகசியம் எனக்கு மட்டும் அது
கற்றுத்தரும் , கற்றுத்தரும்.
|
காதுவளை துள்ளி துள்ளி காதல் வேதம் ஓதும்
முதுமையிலா தேசம் நோக்கி விழிகள் பாதை சொல்லும்
சாதி மதம் உடைந்து நாளை பூமி வெளிச்சமாகும்
புதுமைகான நான்கு கால்கள் மரபு நதிகள் மீறும்.
No comments:
Post a Comment